மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3% இட ஒதுக்கீடு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்


*மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 சதவீதம்
இடஒதுக்கீடு வழங்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*

*கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.*

 *ஆனால், இந்த சட்டம் முழுவதுமாக அமல்படுத்தப்படுவதில்லை. மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வியில் இந்த இட ஒதுக்கீடு தரப்படுவதில்லை எனக் கூறி, நூங்கம்பாக்கத்தைச் சேர்ந்த எல்.கே.வெங்கட் என்ற மாற்றுத் திறனாளி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.*

*இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஜூன் 22-ஆம் தேதி அனுப்பிய மனுவை பரிசீலிக்கும்படி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.*

*இந்த மனுவுக்கு 3 வாரங்களில் பதில் அளிக்கும்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.*